நிகழும் இறந்தகாலம்
தளபதி படத்தில் கோயில் காட்சி.
ஶ்ரீவித்யா, ஜெய்ஷங்கர், ரஜினி மூவரும் சந்திக்கும் புள்ளி. படத்தில் இந்த காட்சியை ஒட்டுமொத்தமாய் களீபரம் செய்வது இளையராஜாவின் பின்னணி இசை. அடிவயிற்றிலிருந்து எழும் ரயிலின் ஓசையும், குழந்தையைத் தொலைத்த புல்லாங்குழலின் அழுகுரலுமாய் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் இழுத்துச் செல்லும் இசை.
இது அக்காட்சியின் இசையைப் பற்றியதல்ல.
The Turin Horse படத்தில் வாழ்வதின் துயரத்தை வெளிப்படுத்தும் முக்கியமான காட்சிகள் கதாபாத்திரங்களின் பின்னாலிருந்து எடுக்கப்பட்டவை. அவை கதை மாந்தர்களை நமக்குக் காட்டும் காட்சிகள் அல்ல. கதை நிலவும் அசாதரமான சூழலில் நம்மை பங்கெடுக்கச் செய்யும் உத்திகள்.
அப்படியாக சந்தோஷ் சிவன் மற்றும் மணிரத்னம் இருவருடைய மேதைமை வெளிப்பட்ட காட்சி அது.
ஶ்ரீவித்யா, ரஜினிக்கும் பின்புறம் கோயிலின் கதவு. அவர்களுக்கு எதிரில் ஜெய் ஷங்கர். கதவுக்குப் பின் தூரத்தில் ரயிலின் ஓசை. அந்தக் காட்சி அங்கு நடைபெறும் காட்சி அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் ஓடும் கூட்ஸ் ரயிலில் தனித்து விடப்படும் குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையில் நடைபெற்ற காட்சி. அந்தத் தாயின் இப்போதைய கணவனுக்குக் கூட அது சொல்லப்பட்ட காட்சிதான்.
ஒரு சின்ன ப்ரேம். மொத்தத்தையும் நமக்குத் திரையில் நிகழ்த்தப்படுகிறது.
ஶ்ரீவித்யாவையும், ரஜினியையும் திரும்பிப் பார்க்கும் ஜெய்ஷங்கருக்கு சொல்லப்படும் ஒருகதை.
ஶ்ரீவித்யாவுக்கு சொல்லப்படும் ஒரு கதை.
ரஜினிக்கு சொல்லப்படும் கதை.
ரயிலின் கதை.
இதே அடுக்கில் அமைக்கப்பட்ட காட்சி. முதல் அடுக்கில் கண்ணுக்குத் தெரியாத ரயில்.
அடுத்த அடுக்கில் ஶ்ரீவித்யா ரஜினி.
அடுத்த அடுக்கில் ஜெய்ஷங்கர்.
இவர்கள் எல்லோரும் திரும்பி நிற்க, நமக்கு நம் முன் கடந்தகாலத்தின் காட்சி விரிகிறது.
Master piece! ❤️




Comments
Post a Comment